ரணில் கைது குறித்து முன்கூட்டியே வெளியானது எப்படி... ரவுப் ஹக்கீம் கேள்வி
அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படும் யூடியுபர் ஒருவர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பதனை முன்கூட்டியே எவ்வாறு கூறமுடியும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரவுப் ஹக்கீம் (Rauff Hakeem) கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த தகவல்களை அரச உயர் மட்டத்தின் யாராவது கசிய விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் செயற்பாடு
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விடயம் ஓர் பாரதூரமானது. இது குறித்து தாங்கள் அச்சப்படுகின்றோம். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் (Harini Amarasuriya) மிக நெருக்கமாக பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்ததை தாம் அவதானித்தோம்.
ஒரு நாட்டின் பிரதமர் என்ற ஓர் பதவியை வகிக்கும் ஒருவர் பொதுவெளியில் நடந்து கொள்வதற்கு சில வரைமுறைகள் காணப்படுகின்றது. ஆனால் அவற்றை மீறி இந்த நபர் குறித்த இடத்தில் நடந்து கொண்டார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் நடவடிக்கை
இவ்வாறான பின்னணியில் குறித்த யூடிபருக்கு எவ்வாறு ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
எனினும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் போது சாதாரண ஓரு குற்றவாளியை கைது செய்வது போல செய்ய முடியாது. பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதவானால் போதிய சாட்சியங்கள் உண்டு எனும் பட்சத்தில் அவரை கைது செய்வது வேறு விடயம்.
எனினும் குற்றப் புலனாய்வு பிரிவினரே அவரை கைது செய்து இருப்பது விமர்சனத்திற்கு உரியது“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
