கணவரை கொன்றவர்களை ஒரு போதும் மன்னிக்கமாட்டேன் - பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்தவின் மனைவி சபதம்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி குறித்து, பிரியந்த குமார தியவதனவின் மனைவி முதியன்சலாகே நிலுஷி திஸாநாயக்கவிடம் பிபிசி தமிழுக்காக ரஞ்சன் அருண் பிரசாத் பேசினார்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது கணவர், தம்முடன் இருந்தவாறே தன்னையும், தனது குடும்பத்தையும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நிலுஷி கூறினார். தனது பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் தொடர்ந்தவாறு, அவர்களின் வாழ்க்கையை சிறப்புற செய்வதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
“எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அதனையே எதிர்காலத்தில் முன்னெடுப்பேன்” என அவர் கூறினார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால், நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, அந்த நாடு உதவி செய்ததை எண்ணி மகிழ்கின்றேன் என்றார்.
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நபர்களுக்கு மனதளவில் மன்னிப்பு வழங்கக்கூடிய மனநிலைமை உங்களிடம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது “குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலைமையும், இன்னும் பல பிள்ளைகளுக்கு தமது தந்தையை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் அல்லவா? அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நிலுஷி வலியுறுத்தினார்.
என் கணவர் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.” என அவர் தெரிவித்தார்.
நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் தொழில் செய்வதற்கான எண்ணம் உள்ளதா? என்றபோது, நான் எதிர்நோக்கியுள் சுகயீன நிலைமை காரணமாக, தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அரசாங்கம் பணம் அனுப்பிய தகவல் தமக்கு வந்துள்ள அதே சமயம், அது இன்னும் தமது கைக்கு வந்து சேரவில்லை என்று நிலுஷி தெரிவித்தார். இலங்கையில் தொடர் விடுமுறை காணப்பட்டமையினால், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. அதனால், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பணம், ஓரிரு தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்படும் என தனக்கு வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் மனைவிக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் 1,00,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா மதிப்பில் 2,02,53,740.00) நட்டஈடும், 1,667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா 3,37,629.85) முதல் மாத சம்பளமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது..
தனது கணவர் மன நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாகவே நிராகரிக்கிறார் நிலுஷி. எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு கிடையாது என அவர் கூறுகின்றார்.
பிரியந்த குமார தியவதனவின் குடும்பத்திற்கு, இலங்கை அரசாங்கம் அண்மையில் ரூபா 25 லட்சத்தை வழங்கியது. தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.