இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பல் - கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்!
மலேசியக் கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த தம்பதியினரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை (MIP) பயன்படுத்தி இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்களம் இன்று அறிவித்தது.
Bahnu Internationals சிண்டிகேட் என ஒரு உண்மையான நிறுவனம் போல் பெயரிடப்பட்ட இந்த குழுவின் மூளையாக செயல்பட்ட 26 மற்றும் 37 வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த கணவன்-மனைவியை ஏப்ரல் 12 ஆம் திகதி கைது செய்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் ரஸ்லின் ஜூசோ (Datuk Ruslin Jusoh) தெரிவித்தார்.
இலங்கை குழந்தைகள்
இது குறித்து ரஸ்லின் இன்று (19) வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
பாஸ்போர்ட் தயாரிக்கும் போர்வையில் குடிவரவு அலுவலகத்திற்கு தங்கள் 12 வயது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி இந்த குழு பெற்றோரை நம்ப வைக்கும் என்று கூறினார்.
பின்னர் "கவுண்டருக்கு வரும்போது, அழைத்துவரப்பட்ட குழந்தைக்கு பதிலாக அதே வயதை ஒத்திருக்கும் இலங்கையிலிருந்து வந்த வேறு குழந்தை புகைப்படம் எடுப்பதற்கும் கைரேகை பதிவுக்கும் அனுப்பப்படும்," என்று அவர் கூறினார்.
இதன்மூலம் கடவுச்சீட்டை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பிள்ளைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்படுவர்.
30,000 முதல் 50,000 யூரோக்கள்
மேலும், அவர்களை அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்களாகவும் (transporter) இந்த தம்பதியே செயல்படுவார் என்றும் ரஸ்லின் கூறினார்.
எத்தனை குழந்தைகள் இதில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சிண்டிகேட் எவ்வளவு காலம் செயல்பட்டது என்பதைக் கண்டறிந்து தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட்டைப் பெற்று ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் 30,000 முதல் 50,000 யூரோக்கள் வரை இந்த கடத்தல் கும்பலுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
