இம்ரான்கான் வருவதற்கு முன்னரேயே முடிவெடுத்து விட்டோம் -அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயத்திற்கு பின்னரே, இலங்கையில் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் கருத்தை, அமைச்சர் சரத் வீரசேகர நிராகரித்துள்ளார்.
ஜனாஸா அடக்கம் செய்யும் விவகாரமானது, அரசியல் தீர்மானம் கிடையாது எனவும், அது சுகாதார தரப்பினரின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அமைச்சரவை பத்திரம் உள்வாங்கப்பட்டு, விரைவில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில், புர்கா தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
இந்த பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் உள்ளனர்..
புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமன்றி, ஜனாதிபதி ஆணைக்குழுவும் இதே பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.