உச்சக்கட்ட முறுகல் - ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு
ஜம்மு - காஷ்மீர் (Jammu and Kashmir) மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த உத்தரவானது இந்தி மத்திய அரசால் இன்று (29.04.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு
இதனைத் தொடர்ந்து, அங்கு சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை இரத்து செய்து அவசரமாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தான் (Pakistan) மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசலடைந்து வரும் நிலையில் தொடர்ந்து 5ஆவது நாளாக இரவில் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட 48 சுற்றுலாத் தலங்களை மூட இந்திய மத்திய அரசு இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
மறுக்கும் துருக்கி
இத்தகைய சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவியை வழங்கியதாக தகவல் வெளியானது.
கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் (27) துருக்கி விமானப்படைக்கு சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானத்தில் ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்ப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.
சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
