இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தல்- இந்திய வெளியுறவு செயலரிடம் வலியுறுத்தவுள்ள கூட்டமைப்பு!
இலங்கையில் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய வெளிவிவகார செயலாளருடான சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரொலோ தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும்(Harsh Vardhan Shringla) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்காலநாதன்(Selvam Adaikalanathan) ஐ.பி.சி தமிழுக்கு இதனைத் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மேலும் மூன்று உயர்மட்ட அதிகாரிகளுடன், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 2ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார். இதனையடுத்து, வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அரசியல் பிரமுகர்கள் , சிவில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகின்றார்.
இந்த நிலையில், கொழும்பில் வைத்து இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது, சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்காலநாதன் கூறியுள்ளார்.