இந்தியாவை கலக்கும் தமிழ் தொழிலதிபர்
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபரான ஷிவ் நாடார் பல்வேறு நல்ல காரியங்களுக்காக ஷிவ் நாடார் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் அவர் நன்கொடை வழங்கி வருகிறார்.
வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை ஷிவ் நாடார் சேவை நோக்கில் சுமார் 1161 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஹூருன் என்கிற சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின் படி,ஷிவ் நாடார் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
யார் அந்த தமிழ் தொழிலதிபர்

பல நிறுவனங்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் சிறிய தொழிலாக ஆரம்பித்து பின் பல நாடுகளுக்கு தங்கள் கிளை விரிவுபடுத்தி இருக்கும்.
அந்த வகையில் இந்தியாவின் ஒரு மூலையில் சிறிய தொழிலாக தொடங்கிய நிறுவனம் ஒன்று, இன்று உலகம் முழுவதும் ஹெச்சிஎல்(HCL) என்ற பெயரில் 60 நாடுகளில் தங்களின் கிளையை விரிவுபடுத்தியுள்ளது.
இத்தகைய பிரம்மாண்டமான ஐடி நிறுவனத்தை தொடங்கியவர் ஷிவ் நாடார் என்ற தமிழர் ஒருவர் தான்.
1945ஆம் ஆண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் பிறந்த ஷிவ் நாடார், பி எஸ் ஜி கல்லூரியில் இலத்திரனியல் பொறியியலாளராக பட்டம் பெற்றார்.
பின் நண்பர்களுடன் இணைந்து கார் ஷெட் ஒன்றில் மைக்ரோகாம்ப் என்ற சிறிய நிறுவனம் ஒன்றை ஷிவ் நாடார் 1970களில் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனம் முதன் முதலில் கால்குலேட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. பின் 1980 களில் ஷிவ் நாடார் ஹெச்சிஎல் என்ற பெயரில் வெறும் 1,87,000 ரூபாய் முதலீட்டில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
அந்த நிறுவனம் தான் தற்போது பல லட்சம் மதிப்புடன் உலகம் முழுவதும் உள்ள 60 நாடுகளில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் ஊழியர்களுடன் செயற்பட்டு வருகிறது.
ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு

2023 ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு சுமார் 2.07 லட்சம் கோடியாகும்.
மேலும் இவர் தலைநகர் டெல்லியின் முதல் பணக்காரராகவும், இந்தியாவின் மூன்றாவது பணக்காரராகவும் திகழ்ந்து வருகிறார்.
ஹெச்சிஎல்(HCL) நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள்(இந்திய மதிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய்) ஆகும்.
சுமார் 40 ஆண்டுகளாக ஹெச்சிஎல்(HCL) நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த ஷிவ் நாடார் சமீபத்தில் தான் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து ஹெச்சிஎல்(HCL) நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா செயற்பட்டு வருகிறார்.
என்ன தான் பணம் இருந்தாலும் கொடுப்பதற்கு மனம் வேண்டும் என்பார்கள், அந்த வகையில் அந்த நல்ல மனம் தமிழராகிய ஷிவ் நாடாருக்கு அதிகமாகவே உள்ளது.
இதனாலேயே ஷிவ் நாடார் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய் நன்கொடையை வழங்கி வருகிறார் என கூறப்படுகிறது.