இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் கடுமையாக சாடும் சஜித் தரப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுடன் (India) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்படா விட்டால் அரசாங்கம் தாய் நாட்டின் இறையான்மையை காட்டிக் கொடுத்துள்ளதாகவே கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்திய பிரதமர் மோடியின் விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கவில்லை.
இந்தியாவுடனான ஒப்பந்தம்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இணையதளத்திலும் பதிவேற்றப்படவில்லை. ஊடகங்களுக்கும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலைமையிலும் அரசாங்கம் அவற்றை மறைத்துக் கொண்டிருக்கிறது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக் கோருமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கூறுகின்றார். இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.
இந்தியாவிடம் ஏன் அனுமதி
ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கே இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
நட்பு ரீதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தால் எதற்காக இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்? அவ்வாறான நிபந்தனையுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கின்றது என்றால் அது தாய்நாட்டை காட்டிக் கொடுத்தல் இல்லையா?
ஏன் இவ்வாறான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியது என்பதை நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்த வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
