இலங்கைத் தமிழருக்கான தமிழகத்தின் ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்கான சூழ்ச்சி! வெளிவரும் தகவல்கள்
இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பேரினவாத சக்திகளின் இந்த சதித் திட்டத்திற்கு சில தமிழ் அரசியல் தலைவர்களும் துணை போகின்றார்களா என கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் கட்சி சார்ந்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய மீனவர்கள் 23 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். போரின் போது சிறிலங்கா கடற்படையின் வேட்டுக்களுக்கு நூற்றுக்கணக்கில் தமிழ்நாட்டு மீனவர்கள் பலியாகியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் தமிழ் நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் மீண்டும் நுழைந்ததன் காரணம், எமது தமிழ்ப் பிரதேசத்தின் கரைகளை அண்டியுள்ள கடற்பரப்பின் அளப்பரிய மீன் வளமே என்பது நன்கறியப்பட்ட விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எமது மீனவர்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகள் பொறுப்போடும் நிதானத்தோடும் கையாளப்பட வேண்டும் எனவும் என். ஸ்ரீகாந்தா வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழக மற்றும் உள்நாட்டு மீனவர்களை மோத வைப்பதற்காக விரிக்கப்பட்டிருக்கும் சதி வலைக்குள் எம்மவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்தி உரிய வழியில் செயற்பட வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே தேவைப்படுகின்றன எனவும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.