யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கிய தமிழக கடற்றொழிலாளர் படகு!
தமிழகம் - நாகை மாவட்ட கடற்றொழிலாளர்களின் படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில், 4 கடற்றொழிலாளர்கள் யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் கரையொதுங்கியவர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடற்றொழிலாளர்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை கடற்றொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்றொழிலாளர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.
வலையை மீட்கும் முயற்சி
இந்நிலையில் அதனை மீட்பதற்காக தமிழகம் - நாகை கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களைப் பின்தொடர்ந்து வந்த நிலையில் படகு இயந்திரம் பழுதடைந்து வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 27ஆம் திகதி, மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த சரவணன், பாண்டியன் உள்ளிட்ட 4 கடற்றொழிலாளர்கள் பைவர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
இயந்திரம் பழுது
இந்நிலையில் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்றொழிலாளர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என விரட்டி அடித்ததுடன் தமது வலைகளை அறுத்து எடுத்துச் சென்றதாகவும் தஞ்சமடைந்துள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்றொழிலாளர்கள் எடுத்துச் சென்ற நிலையில் அந்த வலைகளை தேடி யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிக்கு வந்தபோதே தமது படகில் உள்ள இயந்திரம் பழுதடைந்து இங்கு தஞ்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
திருப்பி அனுப்பும் நடவடிக்கை
தஞ்சமடைந்த கடற்றொழிலாளர்களை மீட்ட வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன் வல்வெட்டிதுறை காவல்துறையினருக்கும், சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளதோடு, பாதுகாப்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சமடைந்த மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு காவல்துறையினருடன் யாழ்.இந்திய துணை தூதரகம் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
