தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மீட்கும் இந்தியாவின் தீவிர முனைப்பு - சர்வதேச நீதிமன்றை நாடும் திட்டம்!
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதோடு, கடற்றொழிலாளர்கள் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்திய அரசு கச்சத்தீவை மீட்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
தேவைப்பட்டால், இதற்காக சர்வதேச நீதிமன்றத்தையும் அணுகலாம் என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விளக்கமறியலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோரியுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கடந்த 27ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள் படகுடன் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்கா அதிகாரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்
மேலும் தமிழக கடற்றொழிலாளர்களின் 98 விசைப்படகுகள் சிறிலங்கா அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எனவே தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்பகுதியில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வேண்டும் என்ற தனது ஆலோசனையை, அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் அடாவடி
இதனிடையே, ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உள்துறை அமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கருத்துரைத்த தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,
சிறிலங்கா கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு சொந்தமான பகுதியில் அல்ல என்றும் கூறியுள்ளார்.
எனினும் சிறிலங்கா கடற்படை அவர்களை சுற்றி வளைத்து, இலங்கை பகுதிக்குள் தள்ளி பின்னரே அவர்களை கைது செய்தது. எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.