தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா - அமெரிக்கா பாராட்டு
கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா வழங்கிய தீவிர ஆதரவு மிகவும் முக்கியமானது என அமெரிக்க திறைசேரியின் செயலாளர் திருமதி ஜேனட் யெலன் (Janet Yellen) தனது பாராட்டை தெரிவித்தார்.
வோஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ஜேனட் யெலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்கா இந்தியா முன்னேற்றம்
கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்காவும் இந்தியாவும் பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வளரும் நாடுகளில் உள்ள கடன் நெருக்கடி பெரிய பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் ஜேனட் யெலன், சுட்டிக்காட்டினார்.
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு விரிவான கடன் நிவாரணம் வழங்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது, ஆனால் இலங்கையின் அவசர கால சூழ்நிலைக்கு ஆதரவளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜேனட் யெலன் அங்கு கூறியுள்ளார்.
இந்தியா எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானவை
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என ஜேனட் யெலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
