அனல் பறக்கப்போகும் இந்தியா–பாகிஸ்தான் போட்டி! டிக்கெட்டுகளுக்கு அலைமோதும் ரசிகர்கள்
2026 ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டங்களாக (phased release) வெளியிடப்பட்டு வருகின்றன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, டிக்கெட் தளத்தில் “Coming Soon” எனக் காணப்பட்டதுடன், “Sold Out” அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால், மேலும் டிக்கெட் தொகுதிகள் விரைவில் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரம்பத்தில் ரூ. 1,500க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலர் 200க்கு மேல் விற்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஏராளமான ரசிகர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், போட்டி குறித்த உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.
சிறப்பு பாதுகாப்பு
இலங்கை ரசிகர்கள் டிக்கெட் பற்றாக்குறை குறித்து அதிருப்தி தெரிவித்தாலும், அதிகாரப்பூர்வ முறையில் மேலும் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7:00 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, பிற்பகல் 3:00 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், போட்டிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |