இலங்கைக்குள் பா.ஜ. கவின் ஊடுருவல்? தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
வெளிநாட்டு கட்சிகளுக்கு எம் நாட்டு தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். இலங்கைக்குள் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாட்டு கட்சி ஒன்று இலங்கைக்குள் கிளைகளை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறான கட்சி ஒன்றை பதிவு செய்யவும் முடியாது. அது எமது நாட்டு கட்சி ஒன்றாக இருந்தால் இலங்கை பிரஜைகளால் கட்சி ஒன்றை அமைத்து, கடந்த 4 வருடங்களாக கட்சியாக செயற்பட்டு, தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் பின்னணி இருக்குமாக இருந்தால் தான், அக் கட்சியை பதிவுசெய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக அறிவித்து போட்டியிட முடியும்.
அவ்வாறு இல்லாமல் எந்தளவு பிரபலமான கட்சியாக இருந்தாலும் நாட்டுக்குள் கிளைகளை அமைத்து தேர்தல்களில் போட்டியிடமுடியாது. அத்துடன் அவ்வாறான கட்சிகள் இலங்கையில் கட்சியொன்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் சட்டத்தின் பிரகாரம் முடியாது.
எமது சட்டத்தின் பிரகாரம் நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றார்.