காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் - 3 பெண்கள் கைது!
மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய நேற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 வீடுகளை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 22 கால் போத்தல் மதுபானங்களுடன் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்னும் ஒரு வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரிடமிருந்து 21 கால் போத்தல் மதுபானங்களுடன் அவரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர் 3,350 மில்லி கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
