கிளிநொச்சியில் திடீர் மரண விசாரணை அதிகாரி மீது தாக்குதல்! களத்தில் இறங்கிய காவல்துறை
கிளிநொச்சியில் திடீர் மரண விசாரணை அதிகாரியை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்படுத்திய இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி காவல்துறை அதிகாரிகளால் குறித்த விசாரணைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி - பரந்தன், குமாரபுரம் பகுதியில் 54 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலுக்கு பிரேதபரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் உடலை விடுவிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
எனினும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை தாமதமாகிய நிலையில், உடலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி குறித்த இளைஞர் குழு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில், திடீர் மரணவிசாரணை அதிகாரி தாக்கப்பட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரது மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய கிளிநொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.