யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : கைகொடுக்குமாறு அழைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச மாநாடு
இந்த தினத்தன்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ அரசுகள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த தீர்மானித்திருக்கிறோம்.
எதிர்வரும் 30ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
உறவுகளைத் தேடித் திரிந்த தாய்மார்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம் மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு இருக்கிறோம். காணாமல் போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம் வெளியிடுவதற்கு இருக்கிறோம்.
17 ஆயிரம் உறவுகள் காணாமல் போயுள்ளனர்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு மகஜர் கையளித்தோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார் யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள் தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.

காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17 ஆயிரம் உறவுகள் 8 மாவட்டத்திலும் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும் மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த மாநாட்டை செய்கிறோம்.
இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை நடத்துகின்றோம் ”என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |