யாழில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் நாளை (25) நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு நேற்று (23) வடக்கு ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு
இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா, மிராக் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், “வழமையாக ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் இந்த தினம், இம்முறை யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும் கொம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்தன. இம்முறை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கடைப்பிடிக்கவுள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.
எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்.
விசேட குழு நியமனம்
இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில் தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும்.

உரிய இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர். அக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத் தீர்மானிக்கப்படும்.
காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின் செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைவாக தற்போது 47 பேர் சேவையில் இணைந்துள்ளதுடன், எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வழங்கப்படவுள்ளன“ என அவர்கள் குறிப்பிட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |