சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கடனுதவி! உறுதிப்படுத்திய பொருளாதார நிபுணர்
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து புதிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக விரைவில் 3 - 4 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதைய தலைமைத்துவ வெற்றிடம் இருந்தபோதிலும், செப்டெம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மீட்புப் பொதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைதியின்மை மற்றும் அடுத்த அதிபர் யார் என்பதில் தீர்வில்லாத நிலை இருந்தபோதிலும், மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர் மட்ட தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மூலம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கை இந்த வருடத்தில் 3 - 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏனைய நாடுகள் கடனுதவி
நாடு பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குடிமக்கள் மீதான வலியைக் குறைக்க, இந்த இடைக்கால நிதியுதவி நாட்டிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வரை எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவைப் பாதுகாக்க நாட்டிற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ள இந்தியாவைத் தவிர, சீனா மற்றும் ஜப்பானிடம் இருந்து இடைக்கால நிதியுதவியை அரசாங்கம் நாடியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.