எமது உறவுகளுக்கு என்ன நடந்தது - சர்வதேசமே எமக்கு சரியான பதிலை வழங்கு!
உறவுகளைத் தொலைத்துவிட்டு ஒவ்வொரு நாளையும் துக்கத்துடனேயே கழிப்பதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,
“சிறிலங்கா அரசிடம் ஏமாந்த நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கேட்டு தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.
51வது கூட்டத்தொடரிலாவது நீதி வேண்டும்
சர்வதசேமும் எங்களை ஏமாற்றாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 51வது கூட்டத்தொடரிலாவது எமக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிநிற்கின்றோம்.
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொரு நாளையும் நாம் துக்கத்துடனேயே கழிக்கின்றோம். நாம் மகிழ்ச்சியாக இல்லை. எனவே எமது உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான பதிலை சர்வதேசம் எமக்கு வழங்க வேண்டும்.
இல்லாவிடில் எமது உறவுகள் வரும் வரைக்கும் நாம் போராடிக்கொண்டே இருப்போம்” எனத் தெரிவித்துள்ளனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.