முக்கிய பரீட்சைகளில் சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்தல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா (Ajith Perera) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுக்கவியல் விடயங்களை உள்ளடக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய பாடமாக்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தீர்மானம்
குடியுரிமை கல்வி பாடத்தை பெயர் மாற்றம் செய்து அதனை அடிப்படை சட்டம் மற்றும் குடியுரிமை கல்வி என்று அறிமுகப்படுத்தும் யோசனையை ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
2026 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை கல்வியில் அடிப்படை சட்டத்தை பிரதான பகுதியாக உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
நாம் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சமயம் ஆகிய பாடங்களை தேவைக்காக கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்க்கையில் சகல பகுதிகளுடனும் தொடர்புடைய சட்டத்தை கற்பதில்லை.
புதிய கல்வி மறுசீரமைப்பு
சட்டத்தை கற்பதும் சட்டமாக்கப்பட வேண்டும். சட்டம் தெரியாது என்று குறிப்பிடுவது விடுவிப்புக்கான ஒரு காரணியாக கருதப்படமாட்டாது. சிவில் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் குடியியல் சட்டம் தொடர்பில் அடிப்படை புரிதலை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது.
தற்போதைய பாடத்திட்டத்தில் இதற்குரிய போதுமான வழிமுறைகள் கிடையாது. புதிய கல்வி மறுசீரமைப்பில் அடிப்படை சட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
