22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும்.
22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு
கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.
என்றாலும் இவை எதனையும் பொருட்படுத்தாமல், மிகவும் பிடிவாதமாகவும் அகந்தையுடனும் யார் எதிர்த்தாலும் இதனைச் செய்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இதுவரை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்த, நான் உட்பட, அனைவரும் ஜெனீவா மற்றும் நியூயோர்க் என அனைத்து இடங்களிலும் "எமது நாட்டில் தலையிடாதீர்கள்" என்றே கூறி வந்தோம்.
ஏனெனில் எமது நாட்டில் மிகவும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் உள்ளன. எமது உயர்நீதிமன்றம் சர்வதேச ரீதியில் புகழும் நம்பிக்கையும் பெற்ற நிறுவனமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை
எனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு எமது நாட்டிலேயே உள்ளது. எனவே உங்களின் தலையீடு தேவையில்லை எனக் கூறினோம்.
இப்போது அந்த வாதத்தை நம்மால் முன்வைக்க முடியுமா? நேர்மையாக முன்வைக்க முடியுமா? இலங்கை நீதித்துறை முன்னெப்போதுமில்லாதவாறு மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முதலீடுகள் தொடர்பில் இது மிகவும் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முதலீடுகள் அவசியம். இந்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், வெளிநாடுகள், சர்வதேச வங்கிகள் கவனிக்கும் மிக முக்கிய காரணி நீதித்துறையின் சுயாதீனத்தன்மையாகும்.
நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். அதில் சந்தேகம் எழுந்தால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாட்டிற்கு முதலீடுகள் வராது. முதலீடுகள் வராவிட்டால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
எனவே இந்த 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு எமது நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |