இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஓமன் வளைகுடா அருகே 12 இந்திய மாலுமிகளுடன் சென்ற MT Siron என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Togo நாட்டுப் கொடியுடன் சென்ற MT Siron கப்பல் கடந்த சனிக்கிழமை, ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஈரான் ஆயுதப் படைகள் அதனை வழிமறித்தன.
கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு
எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரானியப் படைகள் கப்பலை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தின. இச்சம்பவத்தை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்தக் கப்பலில் மொத்தம் 12 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சகத்தின் இயக்குனர் மந்தீப் சிங் ரந்தவா தெரிவித்துள்ளார்.
இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரந்தவா கூறியுள்ளார்.
இதற்கு முன்பும் இரண்டு இந்தியக் கப்பல்கள் இதேபோன்று தாக்கப்பட்டபோது இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |