ஈரானின் பதிலடி ஆரம்பம் :ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ கட்டமைப்பு மீது தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய படைகள் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்தார்.
ஈரானிய படைகள் பதில் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து, ஈரானில் 80-க்கும் அதிகமான முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.

இதனையடுத்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த நிலையில், ஜோர்டானின் அஸ்ராக் ராணுவத் தளத்தின் மீது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரானிய படைகள் இன்று (ஜூலை 9) தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
அனைத்து அமெரிக்கத் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது
”பயங்கரவாத அமெரிக்க ராணுவம் தனது ஆக்கிரமிப்பை மீண்டும் மேற்கொண்டால், இப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் எங்களின் கடும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்காது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஈரானிய படைகள் ஏவிய 8 ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக ஜோர்டான் ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |