தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்
ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை கொல்ல விரும்பவில்லை
"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்
இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம். அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது. கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |