ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்றது என்று ஈரான் சாடியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
கொள்கை வகுப்பாளர்கள்
இது தொடர்பில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானியப் பிரதமர் முகமது மொசாதெக்கை (Mohammad Mosaddegh) பதவியிலிருந்து அகற்றிய சதித்திட்டத்தின் ஆண்டு நினைவு நாளுடன் ஒத்துப் போவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை, கடந்த 73 ஆண்டுகளாக ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காட்டி வரும் பகைமையின் தொடர்ச்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார விளைவுகள்
மேலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மனிதநேயமற்ற, சட்டவிரோதமான மற்றும் அடாவடியான குணத்தையே இது நிரூபிக்கின்றது எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் புதிய தடைகள், மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் புரிவதை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு பழைய கொள்கையின் தொடர்ச்சியே என்றும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஈரானுக்கு நிதி, வர்த்தகம் அல்லது தளவாட ஆதரவை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் (Economic Warfare) தொடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையிலேயே ஈரானின் இந்த அதிகாரப்பூர்வப் பதில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |