பிரித்தானியா - பிரான்ஸ்: ஜெர்மனியை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம்! இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை திறனை நிரூபிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரித்தானியா இராணுவத் தளமான டியேகோ கார்சியா (Diego Garcia) நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் (IDF) ஈரானின் இந்த ஏவுகணைகள் ஐரோப்பாவின் முக்கிய தலைநகரங்களான பெர்லின், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட நகரங்களை நேரடியாக அச்சுறுத்தும் திறன் கொண்டவை என எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத் தலைவர் லெப். ஜெனரல் ஏயால் சமிர் (Lt. Gen. Eyal Zamir) வெளியிட்ட அறிக்கையில்,
நேரடியாக அச்சுறுத்தல்
“நேற்று ஈரான் இரு-நிலை இண்டர்கான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணையை டியேகோ கார்சியா நோக்கி ஏவியது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்குவதற்காக அல்ல.

அவற்றின் தாக்கு வரம்பு ஐரோப்பாவின் தலைநகரங்களான பெர்லின், பாரிஸ், ரோம் போன்றவற்றை நேரடியாக அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது.
இது ஈரானிய ஆட்சி உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இப்போது லண்டன், பாரிஸ் அல்லது பெர்லின் வரை சென்றடையக்கூடிய ஏவுகணைகளுடன் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.
இந்த சம்பவம், ஒபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களின் பின்னணியில் நிகழ்ந்துள்ளது.
ஈரான் இதுவரை தனது ஏவுகணை வரம்பை 2,000–2,500 கி.மீ என்றே அறிவித்திருந்த நிலையில், 4,000 கி.மீ தொலைவுக்கு ஏவியது இது முதல் முறை என இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.
டியேகோ கார்சியா தாக்குதல்
டியேகோ கார்சியா தாக்குதலில் இரு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவை இலக்கை தாக்கவில்லை. ஒன்று பாதியிலேயே தோல்வியடைந்தது, மற்றொன்று அமெரிக்க கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இருப்பினும், இந்த தாக்குதல் ஈரானின் ஏவுகணை தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதை காட்டுவதாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.
இதனால் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டவை அதிக அச்சத்தில் உள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |