உச்ச தலைவர் கமேனி தொடர்பில் ஈரானின் திடீர் அறிவிப்பு
கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்த ஈரான் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெஹ்ரான் துணை மேயர் முகமது அமீன் தவகோலிசாதே தகவல் வெளியிட்டுள்ளார்.
ஈரானை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் வழிநடத்திய 86 வயதான ஆயதுல்லா அலி கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இறுதிச்சடங்கு
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக, மார்ச் 4 ஆம் திகதியன்று நடத்தவிருந்த இறுதிச்சடங்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று நாள் பொது இறுதிச் சடங்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெஹ்ரான் துணை மேயர் முகமது அமின் தவாகோலிசாதே கூறியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது
2 கோடி மக்கள்
அந்தவகையில், தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கமேனியின் இறுதி விருப்பத்தின்படியும் அவரது உறவினர்களின் ஆலோசனையின்படியும், மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத் தலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |