உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள்
ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டசின் கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கீவ் மற்றும் டினிப்ரோ உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டாவது இரவாகவும் ரஷ்யா புதியதொரு தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ஆயுதப் பற்றாக்குறை
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய தங்கும் விடுதி ஒன்றின் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த விடுதி மீதான தாக்குதலை ஜெலென்ஸ்கி நிர்வாகம் மறுத்துள்ளது.

Image Credit: Britannica
கடந்த ஒரு மாதத்திற்குள் கீவ் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கடுமையான தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், உக்ரைன் வான் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவின் அறிவிப்பு
தற்போதுள்ள வான் பாதுகாப்பு விநியோக நிலைமையைக் கொண்டு ரஷ்யாவின் கணிசமான ஏவுகணைகளை இடைமறிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கூடுதல் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

Image Credit: Reuters
இதற்கிடையில், உக்ரைன் இராணுவம் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் ஒரு புதிய பரிமாணத்திற்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வெளிநாட்டினரை கீவ் நகரை விட்டு வெளியேறுமாறும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |