அமெரிக்கா தண்டிக்கப்படும் - ஈரான் தலைவரின் அடுத்த வார்த்தை : உற்று கவனிக்கும் உலக நாடுகள்
இஸ்ரேல் (Israel) ஈரான் (Iran) போரில் அமெரிக்காவின் (United States) தலையீட்டால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் எமது அடுத்த தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் (22.06.2025) திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டது.
ரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதல், அந்த பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.
ஈரானின் அணு உலைகள்
அமெரிக்காவின் தாக்குதல் ஈரானில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் உயர்மட்ட தலைவர் கமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேலின் வெறுப்பு போக்கு காரணமாகவே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கமேனி தெரிவித்துள்ளதுடன், அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர்
எதிரிகள் தங்களின் பொறுப்பற்ற செயலுக்குக் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தண்டனை கொடுப்போம். இஸ்ரேல் ஒரு பெரிய தவறு செய்து, ஒரு பெரிய குற்றத்தைச் செய்துள்ளது.
அதற்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும், அது கொடுக்கப்பட்டும் வருகிறது; இவர்கள் இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
