மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
புதிய இணைப்பு
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும் என்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது ஒரு பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் IAEA இன் பணிப்பாளர் ரஃபேல் குரோசி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
ஈரான் மீண்டும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவியா, ஹைஃபா உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை பாரிய தாக்குதல்களை தொடங்கியது.
தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தது வருவதுடன் விமானப்படைகள் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டனர், 271 பேர் காயமடைந்தனர் மற்றும் 8,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹைஃபா துறைமுகத்திற்கு பெரும் சேதம்
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோமை எந்தவொரு ஏவுகணையாலும் முறியடிக்கவே முடியாது என எக்காளமிட்டு வந்த நிலையில் ஈரானின் ஏவுகணைகள் துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்து வருகின்றமை இஸ்ரேல் ராணுவ பலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகளை தடுக்கும் திறன் 90% இல் இருந்து 60% ஆக குறைந்துவிட்டமையை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
மோதல் உச்சமடைந்து வரும் இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதலில் "அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு வன்முறை கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
அணுசக்தி திட்டம்
இந்நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான நீண்ட மோதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க உள்ளதாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு (Hezbollah) நேற்று அறிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
