அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!
அமெரிக்காவின் கோரிக்கைகளில் ஈரான் எவற்றுக்கெல்லாம் உடன்படாது என்பது குறித்த முக்கியச் செய்திகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு (IRGC) நெருக்கமான ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தத் தகவல்கள் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட இஸ்லாமியக் குடியரசின் சில சிவப்புக் கோடுகள் (Red Lines) தொடர்பானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவப்புக் கோடுகள்
வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி, முற்றிலும் நிர்ணயிக்கப்பட்ட சிவப்புக் கோடுகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திரக் கடமைகளுக்கு உட்பட்டே செயல்படுகிறார் என்பதைத் தகவலறிந்த வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் இறையாண்மை தொடர்பான முக்கிய விவகாரங்களில் எவ்வித சமரசமும் செய்யப் போவதில்லை என்பதை ஈரான் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் நிபந்தனை
இந்தநிலையில் அமெரிக்காவின் நிபந்தனைகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள ஈரான், தனது பாதுகாப்பு எல்லைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதை இந்த நகர்வு காட்டுவதாகச் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்தச் செய்திகள் நேரடிப் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடையவை அல்ல எனவும் அவை பிராந்திய நிலவரத்தைத் தெளிவுபடுத்துவதற்காக ஈரான் எடுத்த ஒரு முயற்சி எனவும் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்பதை ஈரான் மறைமுகமாக உணர்த்தியுள்ள நிலையில் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகள் எந்தப் பாதையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்