கமேனியின் இறுதிச் சடங்கு! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், ஈரான் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்த வேண்டாம் என ஈரானிய இராணுவத் தளபதி ஒருவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் எதிரிகள், குறிப்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்தவொரு தவறான கணிப்பையும் தவிர்க்க வேண்டும் என்றும், நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு ஈரானிய ஆயுதப் படைகள் கடுமையான பதிலடி கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்தொல்லாஹி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் கமேனிக்கான இறுதி ஊர்வலங்கள் ஜூலை 4 அன்று தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் நல்லடக்கத்துடன் நிறைவடையவுள்ளன.
சக்திவாய்ந்த பதிலடி
இந்த நிலையில், இடைப்பட்ட நாட்களில் கோம் மற்றும் ஈராக்கிலும் இதற்கான சிறப்புச் சடங்குகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Image Credit: BBC
இதற்கிடையில், ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, தங்களின் மக்கள் அல்லது தலைமைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈரான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த இறுதிச் சடங்கு காலத்தில் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெஹ்ரான் மற்றும் மஷ்ஹத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் வான்வெளிகளில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |