தலைவர் பிரபாகரன் 13ஐ நிராகரித்தது சரியென ஆகிறதா...
இலங்கை அரசியலில் மாத்திரமின்றி உலகின் சில நாடுகளின் அரசியலுக்கும் என்றைக்குமே தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேவைப்படுகிறார். தலைவர் பிரபாகரனின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் தடைசெய்கின்ற இலங்கை அரசுக்கு அவரது பெயரை உச்சரிக்காத நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்தவும் முடிவதில்லை. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
நாம் தலைவர் பிரபாகரனின் பெயரை ஏன் உச்சரிக்கிறோம்? அவர்கள் தலைவர் பிரபாகரனின் பெயரை ஏன் உச்சரிக்கிறார்கள் என்பதே அந்தச் சிக்கல். பிரபாகரன் எதிர்த்த 13ஐ ஏன் தமிழ் தலைவர்கள் இன்று கோருகிறார்கள் என்று பேரினவாத தலைவர்கள் சொல்வதுதான் இதற்கு தக்க உதாரணம்.
13ஐ ஏன் கூட்டமைப்பு கோருகிறது

2015இற்கு முந்தைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சகூட, பிரபாகரன் நிராகரித்த 13ஐ ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது என்று கேட்டிருந்தார்.
இந்தக் கருத்தை பேரினவாத சிந்தனை கொண்டு பேசுகின்ற செயல்படுகின்ற சிங்கள அரசியல்வாதிகள் பலரும் சொல்லியும் கேட்டுமுள்ளனர். அதற்கான பதிலை இந்தப் பத்தியின் இறுதியில் பார்ப்போம்.
இப்போது இலங்கையில் மீண்டும் 13ஆவது திருத்தமும் காணி மற்றும் காவல்துறை அதிகாரமும் குறித்து அதிகமும் பேசப்படுகின்றது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் பேரினவாத தரப்புக்குள்ளேயே கருத்து மோதல் மூண்டிருக்கிறது.
தனிச்சிங்களச் சட்டம்

இலங்கை தீவு சுதந்திரம் பெற்ற பின்னர், அச் சுதந்திரத்திற்காக பெரும் உழைப்பை வழங்கிய ஈழத் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக்கூட கருதாமல் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் முக்கிய வெளிப்பாடாக 1956இல் தனிச்சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அத்துடன் கல்வி உரிமை மறுப்பு, பணியிட உரிமை மறுப்பு, மொழி வெறுப்பு, இனவொடுக்கல், நில ஆக்கிரமிப்பு என்று ஈழத் தமிழ் மக்களை இனவழிப்பு செய்கின்ற வேலைகளில் இலங்கை அரசுகளும் பேரினவாதிகளும் ஒன்றுபட்டுச் செயல்பட்டனர். இலங்கை அரசின் அதிகாரபூர்வ செயலாகவே தமிழினம் மீதான ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது,
அடிப்படையில் இலங்கை அரசின் கட்டமைப்பும் அரசியல் யாப்பும் ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கி அழிப்பதையே வழிமுறையாக கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டமே வழியென்ற தீர்வுக்கு தலைப்பட்டனர்.
அன்றைக்கு 1958இல் தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக தமிழ் தலைவர்கள் போராடிய போதும் இனப்படுகொலையே அரசின் வழிமுறையாக கையாளப்பட்டு சுமார் 300 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
தமிழ் தரப்பு அகிம்சை வழியாக முன்னெடுத்த அத்தனை போராட்டங்களுக்கும் நியாயக் கோரிக்கைகளுக்கும் இனவழிப்புக்களும் வன்முறைகளுமே பதிலாக்கப்பட்ட நிலையில் தான் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டத்தை ஈழத் தமிழர் தரப்பு கையில் எடுக்க நேரிட்டது.
தனித் தமிழீழ தீர்மானம்

வட்டுக்கோட்டையில் தமிழ் தலைவர்கள் தனித் தமிழீழ தீர்மானத்தை எடுத்த நிலையில், அன்றைய தமிழ் இளைஞர்கள் அதற்கு செயல் வடிவம் கொடுத்தனர். ஒடுக்குமுறையின் தீராத காயங்களினாலும் வடுக்களினாலும் அடக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கிப் பங்கெடுத்தனர்.
அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் நிகரற்ற தலைமை எடுத்த அரசியல் தீர்மானங்களும் போராட்டப் பயணங்களும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் பேரவாவை உலக அரங்கில் தீர்க்கமாக்கின. உலக அரங்கில் தமிழரின் கோரிக்கையின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம்

இந்த நிலையில்தான் 1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டம், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. ஈழ விடுதலை சார்ந்து அன்றைய நாட்களில் தமிழ் நாட்டில் இருந்த அழுத்தங்களும் இந்தியா இலங்கை மீது கொண்டிருந்த தலையீடுகளாலும் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதும், அது இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையை தீர்க்க ஒருபோதும் பயன்படாது என்றும் அதனால் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் விளையும் என்றும் அன்று தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம் தெளிந்து தீர்மானித்தது.
1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி, 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்தது. குறையளவில் நடைமுறைக்கு வந்த 13ஆவது திருத்தம் 36 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே தலைவர் பிரபாகரன் தலமையிலான விடுதலைப் புலிகள் 13ஐ நிராகரித்தமையின் நியாயத்தை தீர்க்க தரிசனம் மிக்க தீர்மானமாக எடுத்துரைத்து நிற்கின்றது.
ஆக 36 ஆண்டுகளாக சேடமிழுக்கும் ஒரு அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் தராமல் என்னென்ன பாதிப்புக்களை தந்தது என்பதை ஆராய்ந்து பார்க்கின்ற போதும் விடுதலைப் புலிகளின் தீர்க்க தரசினமும் நியாயம் மிக்க வழிமுறையும் காலத்தின் முகத்தில் அறைகின்றது.
இனவழிப்புப் போர்

எந்த விதமான அதிகாரங்களையும் தராமல் இழுத்தடிக்கும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த போகிறேன் என்று கூறியே 2006இல் அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச இனவழிப்புப் போரை துவங்கினார். அதாவது அரசியலமைப்பின் 13ஐ நடைமுறைப்படுத்தவே 2006இல் கிழக்கில் தொடங்கிய போர் 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டமைக்கு 13ஐ நடைமுறைப்படுத்தும் காரணம் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் காரணத்தையே மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்கு ஒப்புவித்தார்.
லட்சம் ஈழத் தமிழ் மக்களை 13ஆவது திருத்தம் காவு கொள்ளும் என்பதை விடுதலைப் புலிகள் இயக்கம் கணித்தமையால்தான், 87இல் அவர்கள் அதனை எதிர்த்தார்கள். ஆனாலும் கூட இன்று வரைக்கும் வடக்கு கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்களின் நிலைமை இழுபறியில் உள்ளன. இப்போது காவல்துறை அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தோற்றுவிக்கப்பட்டுள்ள விவாதங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்கம் கருதியவை என்ற கணிப்பே தமிழ் மக்களிடம் உள்ளன.
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுகின்ற அணுகுமுறைதான் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதும் 13ஆவது திருத்தத்தின் இயல்பாகும்.
சமஸ்டி தீர்வு

ஆனால் தமிழ் தலைமைகள் சமஸ்டி தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே தமது வலுவான கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள், கடந்த கால தேர்தல்களின் வாயிலாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் சுய நிர்ணய தேச அபிலாசைக்கே ஆணை வழங்கி இருந்தனர்.
அதைவிடுத்து 13இற்குள் ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றி, காலத்தை இழுத்தடிக்க அரசும் பேரினவாதிகளும் முனைகின்றனர். எதுவுமற்ற 13ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றுகிறது இலங்கை அரசு.
பிரபாகரனின் தீர்க்க தரிசனம்

| ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத தீர்க்கதரிசனம் |
இதுவே பத்தியின் ஆரம்ப கேள்விக்கான பதிலாகவும் அமைந்துவிடுகிறது. அன்றைக்கு 13ஐ நிராகரித்து தமிழீழமே தீர்வு என்று தலைவர் பிரபாகரன் கணித்தமை காரணமாவே ஆகும்.
13ஐ பிரபாகரன் நிராகரித்தமையை ஏற்றுக்கொள்ளும் பேரினவாதிகள் அவர் அதற்குப் பதிலாக முன் வைத்து முழமையாக அடையவிருந்த தமிழீழத்தை நடைமுறைப்படுத்தவும் விட வேண்டும்.
ஏனெனில் 87களில் இருந்து இன்றுவரை எதுவும் நடக்காமல் பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் ஈழத் தமிழர்களுக்கு தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனம் மிக்க அன்றைய தீர்மானம் மாத்திரமே மிகுந்த நியாயம் கொண்டது என்பதை காலம் உணர்த்தி நிற்கிறது.