காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?

By Theepachelvan Aug 30, 2026 01:11 PM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்  

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே, தமது பிள்ளைகளையும் உறவுகளையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் நீதிகேட்டு நிற்கிறார்கள்.

அவர்களைப் காவல்துறையினர் இழுத்துச் சென்று வெளியேற்றுகின்றனர்.

உள்ளே இருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வெளியே நடைபெறும் அந்தப் போராட்டத்தைத் தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையைவிட, இந்தக் காட்சி வேறு எதையும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியாது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை

நீதிக்காக நின்ற தாய்மார்கள்

ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசு நிகழ்வு நடத்துகிறது. மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அதே அரச நிறுவனத்தின் முன்பாக நீதிகேட்டு நிற்பதற்கே இடமளிக்கப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்குள் அழைக்கப்படுபவர்கள் ஒருவகை பிரதிநிதிகளாக இருக்கின்றனர்.

வெளியேற்றப்படும் தாய்மார்கள் இன்னொரு உண்மையின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். அந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளியே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையின் அரசியல் உண்மையாகும்.

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் நிகழ்வில் பங்கேற்பதற்காக பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நிவாரணம் வழங்குவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நிவாரணத்தை நீதிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. காணாமல் போன ஒருவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணம், அந்த நபருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலாகாது.

தாய்மார்கள் வீதியில் நிற்பது ஏன்?

இதனால்தான் பல ஆண்டுகளாகத் தாய்மார்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் பணம் கேட்டு நிற்கவில்லை. தங்களது உறவினர்களின் பெயரில் இன்னொரு ஆவணம் கேட்டு நிற்கவில்லை.

தங்கள் பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள், யாருடைய பொறுப்பில் அவர்கள் காணாமல் போனார்கள், அவர்கள் உயிருடன் உள்ளார்களா, இல்லையா என்பதற்கான உண்மையைத் தேடுகின்றனர். அந்த உண்மைக்குப் பின்னால் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்பதையே கோருகின்றனர். 

இந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை நிவாரணத் திட்டமாகச் சுருக்குவது, பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினையை நிர்வாக நடவடிக்கையாகக் குறைத்துவிடுவதாகும்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடந்த சம்பவம் இதனால்தான் முக்கியம் பெறுகிறது.

நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையின் இடைவெளி இன்னமும் நிரம்பவில்லை என்பதை அது வெளிப்படுத்துகிறது. அத்துடன் நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்கும் அரசியல் அணுகுமுறையும் எதன் வெளிப்பாடாகிறது?

கண்டனத்துக்குள்ளான அரசாங்கம்

இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், நடராஜர் காண்டீபன் உள்ளிட்டோர் தாய்மார்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, கடந்த கால மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 ஆகஸ்ட் 30 ஏன் முக்கியமானது?

ஆகஸ்ட் 30ஆம் நாள் உருவான வரலாறும் இதே கேள்வியையே முன்னிறுத்துகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பல நாடுகளில் அரசியல் அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னணியில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2010 டிசம்பர் 21ஆம் நாள் 65/209 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 30ஆம் நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளாக அறிவித்தது. 2011ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

 இந்த நாளின் நோக்கம் காணாமல் போனவர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல.

காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கங்களாகும்.

இலங்கையில் இந்த நாளின் முக்கியத்துவம் அதனால் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தின் இறுதிக்காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து குடும்பங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் உள்ளன. தலைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பல குடும்பங்களில் காத்திருப்பு முடியவில்லை.

இந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு இலங்கை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி பதிலளிக்க முயன்றுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டது. சட்டங்களும் இயற்றப்பட்டன.

சர்வதேச உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு நிறுவனம் இருப்பது மட்டும் ஒரு குடும்பத்துக்கு நீதி கிடைத்ததற்கான அடையாளமாகாது. விசாரணையின் முடிவு என்ன? உண்மை என்ன? பொறுப்பானவர்கள் யார்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பவையே முக்கியமான கேள்விகள்.

சர்வதேச விசாரணை ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு நீண்டகாலமாகத் தெளிவான பதில் இல்லாததே உள்ளகப் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. அதனால்தான் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை தொடர்ந்து எழுகிறது.

இது இலங்கையைத் தண்டிப்பதற்கான கோரிக்கையாக அல்ல; இலங்கையால் இதுவரை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைக்கு சுயாதீனமான விசாரணை தேவை என்பதற்கான கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, அதற்கான சூழ்நிலைகள், பொறுப்புடையவர்கள், கட்டளைப் பொறுப்பு, ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவை சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையால் ஆராயப்பட வேண்டும். ஆகஸ்ட் 30 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முரண்பாடு இந்தக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நிகழ்வு நடத்தும் அரசாங்கமே, அவர்களுக்காக நீதிகேட்டு நிற்கும் தாய்மார்களை வெளியேற்றும் நிலையில் இருக்குமானால், அந்த அரசாங்கத்திடம் மட்டும் நீதியை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அரசின் அனுதாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு அரசின் அறிக்கைகளும் மாத்திரம் தேவையில்லை. அவர்களுக்கு முடிவு தேவை. உண்மை எங்கே இருக்கிறது என்பதற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கும் பதில் வேண்டும்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விசாரணை தேவை. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதற்கான நீதியும் தேவை. ஆகஸ்ட் 30 இந்தக் கேள்விகளை மீண்டும் உலகத்தின் முன் கொண்டுவருகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்ட தாய்மார்கள், இந்தக் கேள்விகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர்.

அவர்களின் போராட்டத்தை வெளியேற்றலாம். அவர்களின் குரலைத் தடுக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அதனால் மறைத்துவிட முடியாது.

இலங்கை அரசு நினைவு நிகழ்வுகளை நடத்துவதைக் காட்டிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த நாளுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும்.

அந்தப் பதில் உள்நாட்டில் கிடைக்காதவரை, சர்வதேச விசாரணை மூலம் நீதியைத் தேடுவது பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான உரிமையாகவே தொடரும்.

இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!

இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!

மனிதத்தை மறக்காதிருக்க வேண்டும் என வலியுறுத்தும் உலக மனிதநேய நாளில் ஈழத்தின் நினைவுகள்...

மனிதத்தை மறக்காதிருக்க வேண்டும் என வலியுறுத்தும் உலக மனிதநேய நாளில் ஈழத்தின் நினைவுகள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 30 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026