இசைப்பிரியா படுகொலை : நாடாளுமன்றத்தில் சாடிய சிறீதரன் எம்.பி
இசைப்பிரியாவினுடைய மரணம் தமிழ் மக்களை எவ்வளவு பாதித்திருக்கும் என சிந்தித்து பாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (18.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது.
மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவினுடைய மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே உங்களுடைய பிள்ளைகள், இளைஞர்கள், நீங்கள் எவ்வாறு இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, 70,000இற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் பலி கொடுத்து ஒரு நீண்ட பயணத்தின் ஊடாக மெல்ல மெல்ல வளர்ந்து 50 ஆண்டுகள் காத்திருந்து ஒரு அரசியல் உரிமையை ஜனநாயக ரீதியாக உங்களால் நிலைநாட்ட முடிந்திருக்கின்றது என்றால் இது இந்த உலகப் பந்திலே இலங்கையிலே ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு மாற்றம்.
இதே மாற்றம் ஏன் தமிழர்களுக்கு வராது என்று கூட நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இயற்கை என்பது எப்பொழுதும் இடைவெளிகளை வைத்திருப்பதில்லை. எங்கு தவறு நடக்கின்றதோ எங்கு பிழைகள் நடக்கின்றதோ, அந்த இடங்களில் இயற்கை தன்னுடைய பங்கை தீர்மானிக்கும்.
சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள். ” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
