நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள்
"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) காலை ஆரம்பமாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட செயலகங்கள், அரச அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் சுதந்திர தினம் கொண்டாடடப்பட்டது.
யாழ்ப்பாணம்
அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபரின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன்
வவுனியா
இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது.
வவுனியா பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ் சிங்களம் என இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு சுதந்திரந்திர தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது.

செய்திகள் - கபில்
மன்னார்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - நயன்

திருகோணமலை
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
கொட்டும் மழையிலும் 78 ஆவது தேசிய சுதந்திர தேசியக்கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன் 78வது சுதந்திரதின நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூரில் இடம்பெற்றது போது தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் மத்ரஸாவிலிருந்து தேசிய கொடியை அசைத்தவாறு தோப்பூர் முட்சந்திவரை பேரணியாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - றொசான், எம்.என்.எம்.புஹாரி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |