சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கின் ஆஸ்திரேலிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தைச் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் நடத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஹெர்சோக்கின் வருகையை முன்னிட்டுச் சிட்னி மாநகரம் முழுவதும் சுமார் 2,000-இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தடை
இருப்பினும், காவல்துறையினரின் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் (ஒரு பெண் மற்றும் 9 ஆண்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, சிட்னி டவுன் ஹால் (Town Hall) பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், காசாவில் நிலவும் சூழலுக்கு இஸ்ரேலிய ஜனாதிபதியே பொறுப்பு எனத் தெரிவித்து அவருக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

பலஸ்தீன நடவடிக்கை குழு (Palestine Action Group) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, ஹெர்சோக்கை ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதித்த அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், போராட்டக்காரர்கள் டவுன் ஹாலில் இருந்து நாடாளுமன்றம் வரை பேரணியாகச் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் அதற்குத் தடை விதித்துள்ளனர்.
தொடர்ச்சியான போராட்டங்கள்
இதன்போது, தடையை மீறி முன்னேற முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, பலத்த பாதுகாப்புடன் பாண்டி பீச் (Bondi Beach) பகுதிக்குச் சென்ற ஹெர்சோக், கடந்த டிசம்பர் மாதம் அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அங்கு கூடியிருந்த யூத சமூகத்தினரிடையே பேசிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் முடிந்து மக்கள் கலைந்து சென்றாலும், நகரின் முக்கிய இடங்கள் மற்றும் இஸ்ரேலியத் தூதரகப் பகுதிகளில் இன்னும் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மெல்போர்ன், பெர்த் மற்றும் கான்பெர்ரா ஆகிய நகரங்களிலும் இன்று காலை வரை தொடர்ச்சியான போராட்டங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |