பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பலஸ்தீன அதிகார சபைக்கு எதிராகப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும், தனது நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றங்களில் இஸ்ரேலுக்கு எதிராகப் பலஸ்தீனம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், மேற்குக்கரையில் இதுவரை இராணுவத்தின் வசம் இருந்த சிவில் நிர்வாக அதிகாரங்கள் இனி இஸ்ரேலிய சிவில் அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யூதக் குடியேற்றங்கள்
இந்தநிலையில், பலஸ்தீனத்தின் “ஏரியா பி (Area B)” பகுதியில் உள்ள ஐந்து சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், பலஸ்தீன அதிகார சபைக்குச் சேர வேண்டிய வரி வருவாயை நிறுத்தி வைக்கவும், அதன் உயர்மட்ட அதிகாரிகளுக்கான பயண அனுமதிகளை ரத்து செய்யவும் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, மேற்குக்கரையில் பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் புதிய கட்டுமானங்களைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை அகற்றவும் அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டங்கள்
இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செயற்பாடு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை முழுமையாகச் சிதைக்கும் எனப் பலஸ்தீனத் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக முன்னெடுக்கப்படும் இத்தகைய குடியேற்ற விரிவாக்கங்கள், பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |