இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் நான்கு இஸ்ரேலிய மதஸ்தலங்கள் இருப்பதை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி (Sunil Senevi) ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(05) உரையாற்றிய அமைச்சர், பொத்துவில், வெலிகம, எல்ல மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இடங்களில் இந்த மதஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவற்றில் இரண்டு பதிவு செய்யப்படாதவை என்றும், மற்ற இரண்டு தேவையான சட்டப்பூர்வ அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
சட்டப்பூர்வமாக பதிவு
இதன்படி, பொத்துவில் மற்றும் திம்பிரிகஸ்யாயவில் நிறுவப்பட்டுள்ளவை பதிவு செய்யப்படாதவை என்றும் வெலிகம மற்றும் எல்லவில் உள்ளவை சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த மதஸ்தலங்கள் 2022 சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கொழும்பு 07 மற்றும் தெஹிவளையில் உள்ள அல்விஸ் பிளேஸில் நிறுவப்பட்ட மேலும் இரண்டு மதஸ்தலங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் தொடர்ந்தும் கேள்வியெழுப்பினார்.
விசாரணை
அத்துடன், பிரதமர் முன்பு அவை சட்டவிரோத நிறுவனங்கள் என்பதை ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டிய ரஹ்மான், பாதுகாப்பு வழங்குவதற்காக காவல்துறை சிறப்புப் படை ஏன் நியமிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுனில் செனவி, இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், தற்போது கொழும்பு 07 இடத்திலிருந்து சிறப்புப் படை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த மையங்கள் உணவகங்கள் மற்றும் பிற வணிக சொத்துக்களாகப் பதிவு செய்யப்பட்டு நிறுவப்படுகின்றன என்றும், அவை தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகள் கிடைத்தால் மட்டுமே விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அமைச்சர் சுனில் செனவி மேலும் தெரிவித்தார்.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர், இந்த நிறுவனங்கள் குறித்து அமைச்சகம் மேலும் விசாரணைகளை நடத்தி வருவதாக உறுதியளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
