நீதிபதியை அவமதித்த குற்றச்சாட்டில் மூவர் கைது
யாழ். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரோயகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33, 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முதன்மை வீதியில் பயணித்துள்ளார்.
அவ்வேளை முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.