புதிய அரசியல்யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை- நாடு தழுவிய ரீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்!
அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி நாடு பூராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு சச்சிதானந்தம் ஏற்பாட்டிலேயே இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் மாலை வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள்.
அத்தோடு சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும், இல்லாவிட்டால் இரண்டு மதங்களும் மதமாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும்.
குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதமாற்றிகளின் செயற்பாடு அதிகரித்து காணப்படுகின்றது.
அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள் அதனையும் நிறுத்த கோருகின்றோம்.
அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள். ஆனால் இலங்கை ஒரு சோலைவனம் இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.
எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.