யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்
2024 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா யாழ் (Jaffna) கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் (P. S. M. Charles) இன்று (09.08.2024) காலை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்.
இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழா
யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், வெளியீட்டகங்கள், புத்தகங்கள் சார் அமைப்புக்கள் பங்குபற்றுகின்றன.

இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிவரும் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளன.
எமது சமூகத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், எழுத்தாளர்களை வெளிக்கொண்டுவரும் வகையிலும், எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்புக்கான களமொன்றை உருவாக்கும் வகையிலும் இந்தப் புத்தகத் திருவிழாவினை யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றம் ஒழுங்கு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள்
அதுமட்டுமன்றி யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா இனி ஒவ்வொருவருடமும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் முதியோர் என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



