யாழ் - கல்வியங்காடு சம்பவம் - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்றுதினம்(12) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய(14) நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்டவர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை

அத்துடன், இச்சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட சிறுமி இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பரிசோதனைகளின் பின் சிறுமி அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னணி

நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் அவர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின், அவரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர்.
அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
