வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்- புலனாய்வாளர்கள் குவிப்பு!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் காலை 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அண்மையில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம். அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலே இன்றைய சிறுவர் தினத்தினை நாங்கள் கறுப்பு நாளாகவே கொண்டாடுகின்றோமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வெளியே புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


