அம்பலமான ஊழல்- உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி அலுமாரியை உடைத்து ஆவணங்களை அழித்த அதிகாரி!
பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸ்டின் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தான் வழக்கினை பதிவு செய்துள்ளதாகவும் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து சபையின் தலைவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததன் காரணமாக திகதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி மிரட்டி அலுமாரியினை உடைத்து அவருக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தையும் கொழும்பிற்கு எடுத்துச் சென்று அழித்துள்ளார்.
மேலும் உரித்தான பனை அபிவிருத்தி சபையின் சொத்துக்களை தனியொருவர் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் பொதுநபராக தான் இதற்கு வழக்கு தொடுத்துள்ளதாகவும் இந்த வழக்கின் மூலம் அவரது ஊழல்கள் அம்பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபைக்கு பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் அரச தலைவர் ஏன் மௌனம் காட்டுவதாகவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி கொடுக்க முடியும் ஆனால் தற்போதுள்ள தலைவர் போன்றவர்களின் ஊழல் நடவடிக்கையின் காரணமாக பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் மிகவும் பூச்சிய நிலையில் காணப்படுகின்றது இது தொடர்பில் அரச தலைவர் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.