யாழ்.மாநகரசபையின் செயற்பாடு: ஈபிடிபியின் குற்றச்சாட்டு
ஈ பி.டி.பி.(epdp) இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் இன்றைய(17) அமர்வில் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டிய முன்னாள் முதல்வர், திண்ம கழிவகற்றல் தொடர்பான செயற்பாடுகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கும் ஆட்சேபனையை வெளிப்படுதினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல்
" முன்னைய எமது ஆட்சிக் காலத்தில் யாழ். மாநகர சபையில் 35 உழவு இயந்திரங்கள் இருந்தன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்(douglas devananda) இணக்க அரசியல் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தியின் பின்னர் யாழ்ப்பாணத்தில் எந்தவித மாற்றமும் நடைபெறவில்லை.
அந்த காலகட்டத்தில் 4 உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்று திண்மக் கழிவுகள் மிக நேர்த்தியாக அகற்றப்பட்டுக் கொண்டு இருந்தன. எனினும் திடீரென்று தனியாருக்கு ஏன் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. எனவே தற்போதைய முதல்வர் இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
துறை சார்ந்த அதிகாரிகள் பங்கு பற்ற வேண்டியது அவசியம்
அதேபோன்று, கடந்த காலங்களில் சபை அமர்வுகளின் போது துறை சார்ந்த அதிகாரிகள் சபை கூட்டங்களில் பங்குபற்றியமையை சுட்டிக்காட்டிய முன்னாள் முதல்வர், சபையில் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்ற விடயங்களை முழுமையாக கிரகித்து வினைத் திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரிகள் சபை அமர்வுகளில் பங்கு பற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
அவற்றைவிட, நல்லூர் உற்சவ காலத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக 40 பெண்களுக்கு இடங்கள் வழங்க வேண்டும் எனவும் இன்றைய சபை அம்வில் ஈ.பி.டி.பி. கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
