தவறிழைக்கும் யாழ். மாநகர சபை - மக்கள் கடும் அதிருப்தி
யாழ்ப்பாணம் (Jaffna) மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறு விதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்த போதும் அவற்றை சீர் செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளார்கள்.
வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லுண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயல்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.
இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும் போது உரிய முறையை பின்பற்றாமையை அவதானிக்க முடிந்தது.
அதாவது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.
இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது. அந்த உழவு இயந்திரத்துக்கு இலக்க தகடும் காணப்படவில்லை.
மாநகர சபையின் கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது.
யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளரான ச.கிருஷ்ணேந்திரன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
