யாழ் மாநகர முதல்வர் தெரிவில் சூட்சுமம் - மேல் நீதிமன்ற படியேறிய மணிவண்ணன்
யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமை முறையற்ற விதம் எனத் தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் முதல்வராக தெரிவு செய்ய முடியாது என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல்வர் தெரிவு
யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாத நிலையில், முதல்வராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 20 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.
இதன்படி யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்
வழக்கு தாக்கல்
இந்த நிலையில், முறையற்ற விதத்தில் யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனால் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது,
பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை,
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டுச் சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை
ஆகிய மூன்று விடயங்களுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.