புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி!
யாழ்.பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணா்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கண்ணீருடன் உணர்வுபூர்வ அஞ்சலி
இதன் போது 3 மாவீரர்களை மண் விடுதலை போராட்டத்திற்கு அர்ப்பணித்த தாய் ஒருவர் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து உறவுகள் கண்ணீர்மல்க, உணா்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
தீவிர கண்காணிப்பு
இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.